Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/12/2018

ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?

சில வாரங்களாக வலைதளங்களில் பல பெற்றோர்களின் தேடல் என்ன தெரியுமா? ’ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?' என்பதுதான். காரணம், இது பொதுத் தேர்வுகளுக்கான காலம்.

ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை. ஞாபகத்திறனை அதிகரிக்கும், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகள் பற்றிப் பார்க்கலாமா?

மீன்:

தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இருந்தாலும், கொஞ்சமாக மீன் வகைகளை உட்கொள்ளலாம். நன்றாக வறுத்த, பொரித்த மீன் உணவுகள் மட்டும் வேண்டவே வேண்டாம். மீன் குழம்பு சாப்பிடுவது சிறந்தது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega – 3 fatty acids) நிறைந்த மீன்கள், அறிவாற்றலைப் பெருக்குவதற்கு உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளைச் செல்களை புத்துணர்வுடன் செயல்படவைக்கும். நினைவாற்றலைப் பெருக்கவும் உதவும்.
வல்லாரை:

ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும் என்றவுடனே எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருவது வல்லாரை. தண்ணீர் நிறைந்த பகுதிகளில் வளரும் படர் தாவரம். நினைவுத்திறனை அதிகரிக்கும் தன்மை இதற்கு இருப்பதால், வல்லாரைக்கு யோசனவல்லி’ என்றும் பெயருண்டு. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை, வல்லாரையைப் பொரியலாகவோ, கூட்டாகவோ, சட்னியாகவோ செய்து பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். வல்லாரை இலைகளை உலர்த்தி, பொடியாக்கி, வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு வேளை, அரை டீஸ்பூன் அளவுக்குப் பாலில் கலந்து கொடுத்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்

மஞ்சள் : 

முதிர்ந்த வயதில் தோன்றும் அல்சைமர் நோயால் (Alzheimer's disease) அவதிப்படும் நோயாளிகளின் ஞாபகமறதியை மஞ்சள் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. `மஞ்சளும் மூளையின் செயல்பாடுகளும்’ சார்ந்து பெரியளவில் ஆய்வுகள் நடைப்பெற்றுவருகின்றன. பாலில் தினமும் சிறிது மஞ்சள் தூளும், மிளகுத் தூளும் கலந்து, உங்கள் செல்லங்களுக்குப் புகட்டுங்கள். உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நீங்கள் கவனிக்கலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள், மனச்சோர்வையும் குறைக்கிறதாம்.

முட்டை: 

முட்டையிலுள்ள கோலைன், ஃபோலேட், வைட்டமின் பி12 போன்றவை மூளைக்கு போஷாக்கை வழங்கக்கூடியவை. ஆனால், பிராய்லர் கோழி முட்டைகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். நாட்டுக்கோழி முட்டைகளை மட்டுமே பயன்படுத்தவும்.

பழங்களும் காய்களும்:

கறுப்பு திராட்சை, பப்பாளி, கொய்யா, செவ்வாழை, பூசணி போன்றவற்றிலிருக்கும் ஆந்தோசயனின்களும் (Anthocyanins) மூளையின் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. மூளையை உற்சாகமாக்குவதோடு, பழங்களும் காய்களும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப் பழங்களை ஆசைதீரச் சாப்பிடலாம். கீரை வகைகளில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. கீரைகள் மனதை இதமாக்கும்; மலமிளக்கியாகவும் செயல்படும்.
நம்மிடையே நடைமுறையிலிருப்பது நினைவுத்திறன் சார்ந்த கல்விமுறை. அதனால்தான் ஞாபகசக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம். நினைவுத்திறன் மட்டுமல்லாமல், அறிவாற்றலைச் சோதிக்கும் வகையில், கல்வி முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். விரைவில் மாற்றம் வரும் என்று நம்புவோம்!

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"