"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார்.
அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது.
கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான்.
அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா?
தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்?
"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.




















