இது ஒரு தொடர்க(வி)தை, கவிதை வடிவில் உள்ள உண்மைக் கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....
இரவெல்லாம் விழித்ததில்
பகலில்
சிவந்து போன கண்கள்..!
இளமையில் காதலித்ததால்
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!
இரண்டும்
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!
புதைந்துப் போன
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!
உன்னோடும்
உன் நினைவோடும்
பள்ளியில்
சுற்றித் திரிந்த
என் அகராதியை
புரட்டிப் பார்க்கிறேன்...!
பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல்
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள்
சந்தித்துக் கொண்டன ...!
ஒரு நாள்
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில்
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!
அன்றுதான்
எனக்குள் என்னை
அறிமுகப் படுத்தியது காதல்...!
அனுபவம் இல்லாத
அனுபவத்திற்கு
என் முனகல்களை எல்லாம்
முடிச்சுப்போட்டு
எழுதினேன் காகிதத்தில்
அது உன் கைகளில்
கடிதமாக...!
மறு நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச்
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக
காத்திருந்தேன்...!
ஏமாற்றம்... ஏமாற்றம்...!
- தொடரும் !!!











