Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/08/2013

சொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன?


நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை.
ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று 
இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் 
அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது 
தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம்
செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர 
முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப்
பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.

இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்'' என்று முடித்தார்.

சட்டம் என்ன சொல்கிறது என்பதைச் சொல்லிவிட்டோம். இனி அதன்படி நடக்கும் முடிவை எடுக்க வேண்டியது நீங்கள்தான்! நன்றி இணையம்.

13 comments:

  1. அறியாதன அறிந்தேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  3. தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் வாத்தி...!

    ReplyDelete
  4. சமஉரிமை உண்டு.நன்றி

    ReplyDelete
  5. நல்ல தகவல். பயன்படும்!

    ReplyDelete
  6. பெண்கள் நலன் சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கார் 48'ல் கொண்டு வந்தார். ஆனால் அப்போதைய அரசியல்வாதிகள் அதனை நிராகரித்துவிட்டனர். இதனால் அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து கோபத்துடன் விலகினார், அவரின் தீர்மானங்கள் சில 56'ல் இந்திய அரசால் சட்டமாக்கப்பட்டன, அம்பேத்காரின் சட்ட திருத்ததை முழுமையாக ஏற்றிருந்தால் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல ஒவ்வோர் இந்தியரும் தம் உரிமைகள் சட்டங்கள் குறித்து அறிந்திருப்பது அவசியமானதே. நல்ல பதிவு சகா. நன்றிகள்.

    ReplyDelete
  7. சட்டமும் விளக்கமும் அறுமை கருண்...

    ReplyDelete
  8. பெண்களுக்கான சொத்துரிமை பற்றி அறிந்து கொள்ள அருமையான பகிர்வு...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பெண்களுக்கு மகள்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் - நல்லது.. சரி.. ஆனால், மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிறைய தங்க நகை போட்டு, லட்சக்கணக்கில் கல்யாணம் செய்து, அதன் பின்னரும் ஆயிரக்கணக்கில் வளைகாப்பு சீமந்தம் செய்து, பிரசவச் செலவு, பேரன் பேத்தி பிறந்தபின் அவர்களுக்கும் நகை போடுவது போன்ற பல செலவுக்கு அப்பன் மட்டுமல்ல, சகோதரர்களும் கடன் வாங்கி செய்கிறார்கள். ஆனால், கடைசியில் அப்பன் வைத்திருக்கும் சொத்திலும் பங்கு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை !

    ReplyDelete
  10. 1989பிறகு திருமணம்செய்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொருவது நியாயம்.ஆனால் 1989முன்னர் திருமணம்செய்த பெண்களுக்கு பூர்விக சொத்து பிறிக்கபடாமல் இருந்தால் பாகம் உண்டு என்பது எவ்விதத்தில் நியாயம். தந்தை இவர்கள் திருமணதிற்க்கு பெற்ற கடனை மகன்கள் தான் அடைககிறார்கள். இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  11. 1989பிறகு திருமணம்செய்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொருவது நியாயம்.ஆனால் 1989முன்னர் திருமணம்செய்த பெண்களுக்கு பூர்விக சொத்து பிறிக்கபடாமல் இருந்தால் பாகம் உண்டு என்பது எவ்விதத்தில் நியாயம். தந்தை இவர்கள் திருமணதிற்க்கு பெற்ற கடனை மகன்கள் தான் அடைககிறார்கள். இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  12. இந்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் தேவை இன்று.
    (1)சொத்தின் மதிப்பு உயர்ந்து இருப்பதன் காரணமாகவும்.
    (2)வழக்குகள் தேக்க நிலைக் காரணமாகவும்.
    (3)வாரிசுகள் விரைவில் பயன் அடையும் நோக்கத்திற்காகவும்.
    (4)குடும்பத்தில், சொந்தத்தில் உறவுகள் மேன்பட திருத்தம் தேவை.
    A.S.Thulasi Sah

    ReplyDelete
  13. இந்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் தேவை இன்று.
    (1)சொத்தின் மதிப்பு உயர்ந்து இருப்பதன் காரணமாகவும்.
    (2)வழக்குகள் தேக்க நிலைக் காரணமாகவும்.
    (3)வாரிசுகள் விரைவில் பயன் அடையும் நோக்கத்திற்காகவும்.
    (4)குடும்பத்தில், சொந்தத்தில் உறவுகள் மேன்பட திருத்தம் தேவை.
    A.S.Thulasi Sah

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"