காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.
விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்? குடிசை வாழ் குப்பனும், சுப்பனும் போல, இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை? எல்லாரையும் போல, இவர்களுக்கும் தலா ஒரு ஓட்டு தானே! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் கூறித்தானே சுதந்திரம் பெற்றோம்!ஊழலில் திளைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையிலுள்ள காங்கிரசுக்கு, இது ஒரு கடைசி வாய்ப்பு.
எந்த வில்லங்கமும் ஏற்படுத்தாமல், லோக்பால் சட்டத்தை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்றி, செயல்படுத்த வேண்டும்.இல்லாவிடில், சுதந்திரம் பெற்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.
இன்றைய காங்கிரஸ் ஆட்சி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும், அடுத்து வரப்போகும் ஆட்சி, கண்டிப்பாக இச்சட்டத்தை நிறைவேற்றும். அதுவும், முன் தேதியிட்டு அமல்படுத்தி, ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும் இது காலத்தின் கட்டாயம்.
சிந்தியுங்கள் உறவுகளே...











