நம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர்.
தமிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது.
சிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்?











