நிலப்பட்டா, அரசு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், உதவித் தொகைகள் என, பலவும் காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது உப்பு சப்பற்ற காரணங்களைக் கூறி, விண்ணப்பத்தைத் தட்டிக் கழிப்பதும், பிறகு அதையே காரணமாக வைத்து, அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதும், வாடிக்கையான விஷயம்.
பொது மக்களும், உரிய கட்டணங்களோடு, லஞ்சமாக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பதும் வழக்கமாகி விட்டது.ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், ஒரு பணிக்கு எவ்வளவு கட்டணம், அப்பணி எவ்வளவு நாட்களில் முடியும், அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தகவல் தெரிவிக்க வேண்டிய அதிகாரியின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்ட, தகவல் பலகை மட்டும், பெரிதாக மாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அதை உண்மையென நம்பி, களத்தில் இறங்கினால், வேலைக்காகாது என்பது வேறு விஷயம். 'நிலப்பட்டா வழங்க ஒரு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கி பிடிபட்டார்' என, பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளிவந்தாலும், அடுத்த கிராம நிர்வாக அலுவலர், லஞ்சம் வாங்க அஞ்சுவதே இல்லை.
காலதாமதம் செய்து லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலர்களை, காலதாமதம் செய்தால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அதுவும் மீட்டர் வட்டி போல் என்று சட்டம் போட்டால், கண்டிப்பாக, நேர்மையாக, சுறுசுறுப்பாக பணிபுரிய வைக்கும்.
நிதர்சனம் இவ்வாறிருக்க, பொதுமக்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காக, கேரள அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.அதன்படி, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் காலதாமதம் ஏற்படுத்தினால், அரசு அலுவலர்களுக்கு தினமும், 250 ரூபாய் வீதம் அதிக பட்சமாக, ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பக்கத்து வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்தால், நாமும் அதை கடைபிடிப்பதில் தவறில்லையே... கேரள அரசின் வழியைப் பின்பற்றி தமிழக அரசும், இதுபோன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தலாமே! முதல்வர் முன் வருவாரா?











