நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். "பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
இந்தியாவில், நடுத்தரக் குடும்பங்களில் கூட, 10 சவரன் நகை இல்லாமல், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது. கந்து வட்டி கடனில் தான், பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. இதற்காக நிலங்களும், வீடுகளும் அடமானம் வைக்கப்பட்டு, பின், வட்டி கட்ட முடியாமல், அவை மூழ்கிப்போகின்றன.
தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். வல்லரசு நாடுகளின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப, தங்கத்தின் விலை ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டங்களிலிருந்து, நாம் விலகி நிற்பதே, விவேகமான செயல். தங்க நகைகள், முதலீடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் சொத்தாக கருதப்படுகிறது.
இந்த காரணங்களுக்காக, பெற்றோர், திருமணத்தின் போது, தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது.
நெருக்கடி தருணங்களில் இவைகளின் மீது, குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.விண்ணுக்கு விலை செல்லும் தங்கத்தை துரத்துவதை விட்டு விட்டு, நம் பொருளாதார சக்திக்குட்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவது தான், நடுத்தர வர்க்கத்துக்கு நல்லது.
இம்மாதிரி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!












