Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/12/2013

உங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை படிங்க...


பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது? எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.




உண்டியலை வாங்கித் தாங்க!

குழந்தைக்கு ஆறு வயதானவுடன் ஓர் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். சேமிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, உண்டியலில் காசு போட பழக்குங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எப்போது யார் காசு தந்தாலும் முதலில் ஒரு பகுதியை உண்டியலில் போடப் பழக்குங்கள்.

எப்போதும் Savings first, Spending next தான்! கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்; மீதியை செலவு செய்ய வேண்டும். இது சின்ன வயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் ஈஸி! எப்படி சின்ன வயதிலேயே பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், அபாகஸ் க்ளாஸ் அனுப்புகிறோமோ அப்படியே சேமிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிடவேண்டும். சின்ன வயதில் ஆரம்பித்துவிட்டால் அது தன்னிச்சை செயல்போல ஆகிவிடும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். தொட்டில் பழக்கம்... பழமொழி தெரியும்தானே!

வங்கிக் கணக்கை ஆரம்பியுங்க!

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள். இப்போது குழந்தைகளுக்கான சேவிங்க்ஸ் அக்கவுன்ட் எல்லா வங்கிகளிலும் கிடைக்கிறது. பெற்றோரை கார்டியனாகக்கொண்டு மைனர் குழந்தைகளுக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு செக்புக் வசதி, பாஸ்புக், 10 வயதுக்கு மேல் என்றால் ஏ.டி.எம். கார்டு வசதி என்று பெரியவர்களைப்போல் அவர்களுக்கும் ஒரு 'செட்’ கிடைக்கும். விளையாட்டாக உண்டியலில் சேர்த்தது போக, பேங்கிலேயே அக்கவுன்ட் இருப்பது குழந்தைகளை சேமிப்பு விஷயத்தில் சீரியஸ் ஆக்கும். தங்கள் பெயரில் பேங்கில் இருந்து அடிக்கடி லெட்டர் வீட்டுக்கு வருவது, பேங்குக்குப் போய் பணம் கட்டுவது இதெல்லாம் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். மேலும், சேமிக்கத் தூண்டும்.

வங்கிக்கு அழைச்சுகிட்டுப் போங்க!

ஆறாம் வகுப்பு தாண்டிய குழந்தைகள் எனில், நீங்கள் வங்கிக்குப் போகும்போது அவர்களையும் முடிந்தவரை கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை குலதெய்வம் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாமி கும்பிடப் போகிற மாதிரி, மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிற மாதிரி, வங்கிக்கும் அழைத்துச் செல்லுங்கள். நம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? வங்கியில் எங்கே பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, செக் போடுவது... இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்து, அவர்களைவிட்டே செய்யச் சொல்லுங்கள். தவறு செய்வார்கள், பரவாயில்லை. அடித்தல் திருத்தல் இருக்கும், தப்பே இல்லை. தவறு செய்யாமல் யாரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள். டெபாசிட், வித்டிராவல், செக், அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட், வட்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகட்டும். எப்படி புகார் செய்வது என்று உங்களை கவனித்து தெரிந்து கொள்வார்கள்.

இதெல்லாம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். அனாவசிய பயம் குறையும். நம் பணத்தை வங்கியிடம் தருகிறோம். அவர்கள் சேவை திருப்தியாக இருந்தால்தான் தொடருவோம். இதில் பயப்படவேண்டிய அவசியம் என்ன என்று தைரியம் வரும். குழந்தையாக வெகுளியாக இருந்தவர்கள் உலக நடப்புகள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிடுவார்கள்.

நிதி நிலைமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

வீட்டு நிதி நிலைமையைப் பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 'நீ சின்னப் பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது, பெரியவங்க பேசும்போது குறுக்கே வராதே' என்று சொல்லாதீர்கள். வருமானம் எப்படி எல்லாம் வருகிறது, மாதச் செலவுகள் என்ன? எதிர்காலச் செலவுகள் என்னென்ன என்று அவர்களுடன் விவாதியுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் நிறையவரும்; சமாளித்தாக வேண்டும் என்பதைப் புரியவையுங்கள்.

அவர்களை சமமாக மதித்துப் பேசுகிறீர்கள் என்றாலே ரொம்ப பெருமையாக உணர்வார்கள். பொறுப்பு உணர்வு அதிகரித்துவிடும். தங்களையும் குடும்பத்தில் முக்கியமான டீம் மெம்பராக நினைத்து தன்னால் முடிந்த பங்குக்கு உதவி செய்வார்கள். அப்படி என்றால்? ஃபேன், லைட்டை நிறுத்தாமல் அறையைவிட்டு வெளியே போவது குறையும். வீண்செலவு செய்வது குறையும். நம்மையும் வீண்செலவு செய்யவிடமாட்டார்கள். சில சமயம் நம் மனம் அலைபாய்ந்து சில பொருட்களை வாங்க முயலும்போது தடுப்பார்கள். நமக்கே 'தகப்பன் சாமியாக’ மாறி நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். நல்ல 'டீம் வொர்க்’ குடும்பத்தில் அமையும். சந்தோஷம் பெருகும்.

முடிவாக, நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தக் காலத்து குழந்தைகளை கம்மியாக எடைபோடாதீர்கள்! அவர்கள் படுஸ்மார்ட். நாம் கோடு போட்டால் ரோடே போடுவார் கள். அவர்களிடம் பொறுப்பு தந்து பாருங்கள்; தாங்களும் கற்றுக்கொண்டு புதுப்புது விஷயங் களைத் தேடிப் படித்து நமக்கும் சொல்லித் தருவார்கள்.

நீங்கள் சிறுகச் சிறுக சேமித்து 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து உங்கள் குழந்தை கையில் கொடுப்பதைவிட நல்லது, அவர்களை சின்ன வயதில் இருந்தே காசு விஷயத்தில் உஷாராக இருக்க பழக்குவது. சேர்த்து வைத்த சொத்து அழிந்துபோகும். ஆனால், கல்வி அழியாது. சேமிக்க பழக்குங்கள். பணம் பற்றிய அறிவை அவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்களைப் பற்றி ஆயுசு முழுக்க கவலைப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது!

நேற்று இணையத்தில் உலாவும்போது நாணயம் விகடன் பக்கத்தில் இந்த தகவலை படிக்க நேர்ந்தது. நன்றாக இருந்ததினால் உங்களுக்கும் ஷேர் செய்கிறேன் நன்றி.

5 comments:


  1. பெற்றோர்கள் அவசியம்
    குழந்தைகளை இந்த வகையில் பழக்கப் படுத்தினால்
    நிச்சயம் குழ்ந்தைகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும்
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புது நாணயம், வித்தியாசமான படங்கள் பொறிக்கப்பட்ட நாணயம், ஐந்து, பத்து ரூபாய் நாணயம், பிறந்த நாள், ஊர்க்காசுன்னு எல்லாத்தையும் சேர்த்து வைக்கும் பழக்கம் என் பிள்ளைகளிடம் உண்டு. உண்டியல் நிரம்பியதும் அதில் உள்ளை சில்லறைகளை மாற்றி ஒரு ஷேர் பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் கொடுத்துட்டு வங்கியில் சேர்த்துடுவாங்க. ஒவ்வொருத்தரும் தலா 23,000 வரை சேர்த்து அவங்கப்பா வீடு கட்ட கடனா குடுத்திருக்காங்க.

    ReplyDelete
  3. // நாம் கோடு போட்டால் ரோடே போடுவார்கள் //

    இன்றைக்கு உண்மை... அறிந்து கொள்ள வேண்டிய தகவலை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  4. உண்மைதான் நான் 3 வயதிலேயே ஆரம்பித்துவிட்டேன் என் மகனுக்கு இப்பழக்கத்தை...

    இன்னொன்றும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் யார் பணம் கொடுத்தாலும் அப்பா பாக்கெட்டில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அதை வாங்கி உண்டியலில் போட வேண்டும் என்று...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"